Monday, August 18, 2008

மொழிகள் தீண்டா வயது...

இடைவெளி இல்லாது
நகர்ந்துகொண்டிருக்கும்
நாட்களுக்கிடையில் தொலைந்துபோன
என் சின்னச் சின்ன சந்தோசங்களைக்கூட
முழுதாய் மீட்டுத் தரமுடிகிறது
ஒரு குழந்தையால்…


இன்னும் மொழிகளின்
வட்டத்திற்குள் விழுந்துவிடாமல்
வெறும் சத்தங்களாலும் அழுகைகளாலும்
பல் முளைக்காத பொக்கைவாய் சிரிப்புகளாலும்
இந்த உலகத்தையே
புரட்டிப்போட தெரிகிறது அதற்கு !


நடக்கத் தெரியாத போதிலும்
தவழ்ந்தே வீட்டைச் சுற்றிவரும்
அதன் கைகளில் கிடைப்பதெல்லாம் வாய்க்குத்தான் !


ஆடியாடி பசித்து புசித்து
ஓய்ந்து என் மடியில்
சட்டென தூங்கிப்போகும் வேளைகளில்
பெருமழை பெய்து
நின்றதைப் போலிருக்கும் !


குட்டிப் பூப்போல
என்மீது தூங்கும்போதில்
கனவு கண்டு சிரிக்கும்..
இந்த வயதில் அதன் கனவுக்குள்
யார் வந்திருக்க முடியும்
கடவுளைத் தவிர…

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...