பார்த்துக்கொண்டிருக்கும் போதே
கலைந்து போகும் மேகங்கள்போல்…
பேசிக்கொண்டிருக்கும் போதே
சின்னச் சின்ன சண்டைகள் இட்டு
என்மேல் பொய்க்கோபம் கொண்டு
முகத்தை அந்த பக்கம் திருப்பிக்கொண்டு
சற்று விலகி நடக்கிறாய்…
உன்னை என்ன சொல்லி
சமாளிப்பதெனத் தெரியாமல்
நான் மௌனத்தில் ஆழ்ந்திருக்கையில்…
சட்டென எங்கிருந்தோ வந்த மழை
நம்மை நனைக்க முற்பட…
ஓடி வந்து உன் துப்பட்டாவிற்க்குள் நுழைந்தபடி
எனக்கும் குடை பிடிக்கிறாய்…
இதுவரை இருந்த கோபமெல்லாம்
எங்கே என நான் கேட்பதைப்போல்
உனையே உற்றுப் பார்க்க…
மெல்ல கண்களை உருட்டி
பார்வைகளை வேறு பக்கம்
அலைய விடுகிறாய் !
தொடர்ந்து உன்மீது
நுழைந்துகொண்டிருக்கும்
என் பார்வைகளின் கனம் தாங்காமல்…
உன் கண்களை மெல்ல மூடிக் கொள்கிறாய் !
என் சூடான மூச்சுக்காற்று வெப்பம்
உடலுக்குக்கருகில் பட்டு
உன் இதழ்களில்
உன்னை அறியாமல் மலர்கிறது
ஒரு குட்டிப் புன்னகை !
ஏதும் பேசாத அந்த ஈர நேரத்தில்…
தொலைந்து போன கோபத்தை சுத்தமாய் மறந்து…
கொட்டும் மழையில்
சொட்டச் சொட்ட
உன் துப்பட்டாவிற்க்குள் குடி புகுந்திருக்கும்
நம்மை சுற்றிலும்…
மௌனமாய் விழுந்துகொண்டிருக்கின்றன
காதலின் திவலைகள்….
Subscribe to:
Post Comments (Atom)
பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...
ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...
கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...
தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...
பிரியமுடன்...
பிரியன்...
No comments:
Post a Comment