Monday, August 18, 2008

நீ எப்பொழுதும் இப்படித்தான்…

மெல்லிய காற்று மெதுவாக
பூக்களை திறப்பதைப்போல
ரகசிய முத்தங்கள் வைத்து
என் ஆசைகளை திறந்துவிடுவாய் !


வெள்ளைப் பனித்துளியை
மெல்ல உறிஞ்சும் சூரியன்போல
மௌனத்தை முகத்தில் பூசி
என் வார்த்தைகளை திருடிச் செல்வாய் !


ஈர மரக்கிளை மெதுவாய்
இலைகளை அவிழ்ப்பதுபோல
உன் விரல்களால்
என் உள்ளங்கைக்குள் பயணித்து
வெட்கங்களை விரட்டியடிப்பாய் !


சில்லென்ற காற்றுப் பட்டு
சீக்கிரம் விழிப்பதைப்போல
சட்டென்று கையைவிட்டு
தூரத்தில் தள்ளி நிற்பாய் !


சூடான நெருப்புப்பொறி
தேகத்தில் விழுந்ததைப்போல
விலகுதல் தாங்காமல்
மீண்டும்வந்து கட்டிக்கொள்வாய் !


அத்தனையும் பார்த்தபடி
அசையாது நின்றிருக்கும்
ஆளுயரக் கண்ணாடிதான்
காட்டிக்கொடுக்கும்
ஐயோ உன் குறும்புகளை…


எனக்குத் தெரியும்
நீ எப்பொழுதும் இப்படித்தான்…

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...