Monday, August 18, 2008

சூட்சுமப் பெருவெளி...

ஏகாந்தம் சூழ்ந்த
எல்லையற்ற சூட்சுமப் பெருவெளிக்குள்
என்னை வீசி எறிந்தது காலம் !


வார்த்தைகளற்ற பரிபாஷைகளோடு
நீள்கின்ற மௌனத்தின்
உரையாடல்களுக்கு மத்தியில்
மதில்சுவர் எழுப்பிக்கொண்டிருக்கின்றன
மங்காத நினைவுகள் !


கருவறையின் கதகதப்பிற்கும்
கல்லறையின் வெதுவெதுப்பிற்கும் இடையில்
நடப்பதென்ன என்பதை அறியாமல்…
கண்டும் காணாத
இருந்தும் இல்லாத ஒன்றை
உணர்ந்தும் உணராமல்
தெரிந்தும் தெரியாமல்
தேடி அலைகிறது…

புதிர்கள் நிறைந்த புதையலைப் போன்ற
யார் வசமுமில்லாத என் வாழ்க்கை !


புத்தக மூட்டைக்குள்
நெளியும் அந்துப்பூச்சிகளாய்
மெல்ல மெல்ல உயிரைக் கடித்துத் தின்றபடியே…

ஏகாந்தம் சூழ்ந்த
எல்லையற்ற சூட்சுமப் பெருவெளிக்குள்
என்னை வீசி எறிந்தது காலம் !

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...