Monday, August 25, 2008

இடைவெளி நிரப்புதல்....

ஒற்றைக்கால் கொக்கின் மூக்கைப்போல்
நீண்டிருக்கும் தனிமையின்
இடைவெளியை நிரப்ப..

இன்றாவது நீ வருவாய் என
முனைப்போடு ஒவ்வொரு நொடியும்
ஒய்யாரமாய் தவமிருக்கிறது
எனது மனது…



சிவந்த தாமரைப் பூவாய்
பிறந்த பிள்ளைப் பாதமாய்
ரகசிய வெட்கம் சிந்தும்
உன் பெண்மைக்கு
இந்த பிரபஞ்சத்தையே பரிசளிக்கலாம்…


சிலந்தி வலையென சிக்குண்டிருக்கும்
எனது நினைவுகளின் மேல் அமர்ந்து
புன்னகையால் வீணை மீட்டுகிறாய்…


ஒரே ஒருமுறை மட்டும்
என்மேல் விழும்
உன் ஒற்றைப் பார்வைக்கு
ஒட்டுமொத்த உயிரையும்
உறிஞ்சிக் குடித்துவிடும் சாமர்த்தியம் இருக்கிறது…


எப்பொழுதாவது என்னை நீ
பிரிய முற்படும் சமயங்களில்
உன் புன்னகைகளையும்முத்தங்களையும்
என் உதடுகளுக்கு கொடுத்துச் செல்ல
தவறுவதே இல்லை…


அந்த இனிப்பு முத்தங்களையும்
குறும்பு புன்னகைகளையும்
என் உதடுகளில் பத்திரமாய்
பாதுகாத்து வைத்திருக்கிறேன்..

நீ திரும்பி வரும்பொழுது
திருப்பி உனக்கே கொடுக்க…

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...