கஞ்சாச் செடிபோல
இழுக்க இழுக்க போதைதரும்
உன் பெண் வாசத்தில்
கட்டுண்டு போனது
என் ஒட்டுமொத்த ஆணவமும் !
பேர் தெரியாத
இதற்குமுன் அறிந்திராத முகர்ந்திராத
காட்டுப்பூக்களைப்போல
விதவிதமாய் மலர்ந்து சிரிக்கும்
உன் வண்ணப் புன்னகைகளை
நிரப்பி அலைகிறது என் ஞாபகம் !
யாருமற்ற ஒத்தையடிப் பாதைகளாய்
வளைந்து நெளியும்
உன் உள்ளங்கை ரேகைகளுக்குள்
சத்தமின்றி தனிமையில்
பயணிக்கிறது என் இதயம் !
உன்னை எதிரில் காணுகிற
வேளைகளில் எல்லாம்
சிறகுகள் முளைத்துவிடுகிறது
என் இமைகளுக்கு !
நதியில் நகர்கின்ற படகைப்போல்
உன் அழகில் மெதுவாய்
மிதந்தபடி இருக்கின்றன..
எனது இரவுகளுக்காக
உன்னிடம் நான்
கடன் வாங்கி வைத்திருக்கும்
இரவல் கனவுகள் !
1 comment:
அருமையாய் இருக்கிறது கவிதை
//உன்னை எதிரில் காணுகிற
வேளைகளில் எல்லாம்
சிறகுகள் முளைத்துவிடுகிறது
என் இமைகளுக்கு !//
:)
Post a Comment