Wednesday, December 10, 2008

ஜாடை மாடையாய்…

கூட்டமிக்க பேருந்து நிலையத்தில்

தோழிகள் கூட்டத்திற்கு நடுவில்

நீ நின்றுகொண்டிருக்கையில்…



உன்னைத் தேடி நான்

வந்துவிட்டதை கண்டதும்

யாருக்கும் தெரியாமல்

என்னுடன் ஜாடையில் பேசிக்கொண்டிருப்பாய்…



நானும் ஜாடையிலேயே

கிண்டலாய் ஒன்று சொல்ல

சட்டென்று சிரித்துவிடுவாய்…



புரியாமல் என்னவெனக் கேட்கும்

உன் தோழிகளிடம் நீ

“சீ சும்மா இருங்கடி…” என

செல்லமாய் அதட்டியபடி

தலையை குனிந்துகொள்ளும் பொழுதும்…



உன்னை சீண்டி கிண்டல் செய்யும்

நெருக்கமான தோழியை

மென்மையாய் கிள்ளும் பொழுதும்…



துள்ளிக் கொண்டு வந்து நிற்கும்

வெட்கத்தில் சிவந்த முகத்தில்

சிக்கித் திணறுகிறது

என் மேல் நீ கொண்ட காதல் !

No comments:


பிரியமானவர்களுக்கு பிரியனின் வணக்கங்கள்...

ஒரு படைப்பாளியாக தங்களை எனது பக்கங்களுக்கு வரவேற்கிறேன்...

கவிதைகளின் பல முகங்களையும், இலக்கியத்தின் பல தடங்களையும், தமிழ் திரைப்படத்துறை பாடல்களின் பல பரிமாணங்களையும் பகிர்ந்துகொள்ள இருக்கும் இந்த களத்தில்...


தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் பக்க பலமாக இருக்கும் எனும் நம்பிக்கையோடு...

பிரியமுடன்...
பிரியன்...